ஸ்ரீநகர்: பிரிவினைவாதிகள் பேரணி நடத்த அழைப்பு விடுத்ததை அடுத்து, காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் ஊரங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஸ்ரீநகரின் லால் சௌக் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்த
பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்தனர். அதைத் தொடர்ந்து, ஸ்ரீநகர் மாவட்டம், அனந்த்நாக் நகர் உள்ளிட்ட பிற முக்கிய பகுதிகளில் ஏற்கெனவே அமலில் இருந்த ஊரங்கு உத்தரவு ஞாயிற்றுக்கிழமை நீட்டிக்கப்பட்டது.
பட்கம் மாவட்டம், பீர்வா நகரின் வார்கம் பகுதியில் சனிக்கிழமை வன்முறை ஏற்பட்டது. எனவே, அந்நகரிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சுதந்திர தினத்தை யொட்டி (ஆக.14), பிரிவினைவாதிகள் சிலர் அந்நாட்டுக் கொடியை ஏற்ற முயன்றனர். நாடு முழுவதும் சுதந்திர தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இணையம், செல்லிடப்பேசி சேவை துண்டிக்கப்பட்டன என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
முன்னதாக, ஜூலை 2-ஆவது வாரத்தில் காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, ஏற்பட்ட வன்முறையில் 2 காவலர்கள் உள்பட 56 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படையினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.