அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட நடவடிக்கை, அரசியல் களத்தை மாற்றியமைத்துவிட்டது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பொருளாதார மேதையான மன்மோகன் சிங்கின் பதவிக் காலத்தில் சரிந்த பொருளாதார வளர்ச்சியை, தேநீர் விற்பனையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய பிரதமர் மோடி மேம்படுத்தியுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.
தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்று செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இதுகுறித்து அமித் ஷா கூறியதாவது:
மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கருப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் இனி செல்லாது என்று கடந்த மாதம் 8-ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்த பிறகு, கருப்புப் பணத்தை ஏன் ஒழிக்கிறீர்கள்? என அவர்கள் கேட்கின்றனர்.
மத்திய அரசின் நடவடிக்கையால் அறிவிக்கப்படாத பொருளாதார நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டுகிறார். அது ஒரு வகையில் உண்மைதான்; ஏனென்றால் அத்தகைய பொருளாதார நெருக்கடி நிலை அவருடைய கட்சிக்குத்தான் உருவாகியுள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் அரசியல் களமே முற்றிலும் மாறியுள்ளது என்றார் அமித் ஷா.