புதுதில்லி: வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டிய எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதியளித்தார்.
மாநிலங்களவை இன்று கூடியதும் சென்னையில் வர்தா புயலால் உண்டான பாதிப்புகள் குறித்தும், நிவாரணப் பணிகளுக்கு போதுமான நிதி உதவி அளிப்பது குறித்தும் காங்கிரசின் ப.சிதம்பரம் மற்றும் திமுகவின் 'திருச்சி' சிவா ஆகியோர் பேசினார்கள். பின்னர் இதற்கு பதிலளித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசியதாவது:
இங்கு உறுப்பினர்கள் பேசியதை நான் முழுமையாக கேட்டேன். அவர்களது கவலையை நான் பகிர்ந்து கொள்கிறேன். சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தும் துரித கதியில் செய்யப்படும். மத்திய அரசுடன் ஆலோசனை செய்து விட்டு தகுந்த நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும். புயலுக்கு முன்பாகவே அதனை எதிர்பார்த்து சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு ஜேட்லி பேசினார்.