பதான்கோட் விமானப்படைத் தளத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவரை துரத்திச் சென்று சுட்டுக் கொன்று வீர மரணடைந்த ராணுவ வீரர் ஜெகதீஷ் சந்துக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது.
தில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெகதீஷ் சந்த் உள்பட 58 பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்று விருதுகளை வழங்கினார். குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் நிகழ்ச்சியில்பங்கேற்றனர்.
இதில் ஜெகதீஷ் சந்த் சார்பில் அவரது மனைவி விருதைப் பெற்றுக் கொண்டார். ஜெகதீஷின் பெயர் அறிவிக்கப்பட்டபோது பெரும் கரவொலி எழுப்பப்பட்டது.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படைத் தளத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி புகுந்து தாக்குதல் நடத்தினர். அப்போது, வீரத்துடன் செயல்பட்டு பயங்கரவாதிகளில் ஒருவரை சுட்டுக் கொன்று, தனது உயிரைத் தியாகம் செய்தார் ராணுவ வீரர் ஜெகதீஷ் சந்த். அவருக்கு போர் அல்லாத காலத்தில் ராணுவத்தில் வழங்கப்படும் இரண்டாவது மிக உயரிய விருதான கீர்த்தி சக்ரா அளிக்கப்பட்டது.
இது தவிர கோர்கா ரைபிள் படையைச் சேர்ந்த கர்னல் எம்.என். ராய்க்கு மறைவுக்கு பிந்தைய விருதாக சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.