முகப்பு
இந்தியா

சட்டச் சிக்கலில் உத்தரகண்ட்: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை

உத்தரகண்ட் மாநிலத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாளை நடைபெறவிருந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நைனிடால் உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

Updated On : 30 மார்ச், 2016 at 8:05 PM
பகிர்:

நைனிடால்: உத்தரகண்ட் மாநிலத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாளை நடைபெறவிருந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நைனிடால் உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

உத்தரகண்ட் முதல்வராக இருந்த ஹரீஷ் ராவத்துக்கு எதிராக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 9 பேர் போர்க்கொடி உயர்த்தியதையடுத்து, மாநில சட்டப்பேரவையில் ஹரீஷ் ராவத் திங்கள்கிழமை (மார்ச் 28), தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கே.கே.பால் கெடு விதித்திருந்தார்.

இந்த நிலையில், ஹரீஷ் ராவத், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் நோக்கில், அவர்களுடன் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ரகசிய விடியோ சனிக்கிழமை வெளியானது. இதைத் தொடர்ந்து, உத்தரகண்டில் அசாதாரண சூழல் நிலவுவதாகக் கூறி ஞாயிற்றுக்கிழமை அங்கு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

Advertisement

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஹரீஷ் ராவத், மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி யு.சி.தயானி, "உத்தரகண்ட் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மை பலத்தை ஹரீஷ் ராவத் வியாழக்கிழமை (மார்ச் 31) நிரூபிக்க வேண்டும்; நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களும் பங்கேற்கலாம்' என்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு, உத்தரகண்ட் மாநில உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்தது.

இந்த மனு, தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப், நீதிபதி வி.கே.பிசித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர், புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "உத்தரகண்ட் பேரவையில் ஹரீஷ் ராவத் பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, வரும் வியாழக்கிழமை (ஏப்.7) வரை தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை புதன்கிழமை (ஏப்.6) மீண்டும் நடைபெறும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோத்தகி தனது வாதத்தின்போது, "குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் உத்தரவுகளில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது' எனத் தெரிவித்தார்.

இதனிடையே, கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ், தாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 6 பேர் புதன்கிழமை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு வருகிற வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.