எதிர்க்கட்சியினர் பயங்கரவாதிகளுக்கு நிகராகச் செயல்படுகிறார்கள் என்று ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசக் கட்சித் தலைவருமான என்.சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.
காக்கிநாடாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது:
ஆந்திர அரசால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு வளர்ச்சித் திட்டத்தையும் செயல்படுத்தவிடாமல் தடை ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் முயற்சி செய்கின்றனர்.
பட்டீசீமா நீர்ப்பாசனத் திட்டம், போலாவரம் நீர்ப்பாசனத் திட்டம், ஆந்திரத்துக்கு புதிய தலைநகர் அமைக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன.
மக்களுக்குப் பயனளிக்கும் நல்ல திட்டங்களை செயல்படுத்த பயங்கரவாதிகள்தான் தடையை ஏற்படுத்துவார்கள். ஆனால், நலத் திட்டங்களை எதிர்க்கட்சியினர் எதிர்ப்பதைப் பார்த்தால், பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு என்ன வேறுபாடு உள்ளது என்ற கேள்வி எழுகிறது என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியையே அவர் மறைமுகமாக இவ்விதம் தாக்கிப் பேசியதாகக் கருதப்படுகிறது.