ஜெய்ப்பூர்: மாநிலத்தில் உள்ள பசுக்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக நீதித்துறை அல்லாத பதிவுப் பணிகளுக்கு 10 சதவீதம் கூடுதல் முத்திரைதாள் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநில முதல்வரான வசுந்தரா ராஜே சிந்தியா கடந்த ஆண்டு மாநில சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பொழுது, ' மாநிலத்தில் உள்ள பசுக்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான அடிப்படைக் கட்டுமானங்களை மேற்கொள்வதற்காக, மாநில அரசு சில வகைகளில் கூடுதல் கட்டணம் விதிக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் முதலில் இந்த பட்டியலில் சட்டப் பதிவு முத்திரைத் தாள்கள், வருவாய் சீட்டு மற்றும் ஆயுள் காப்பீட்டு சீட்டு ஆகிவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாநில நிதித்துறையினால் கடந்த மாதம் 31-ஆம் தேதியிட்ட அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'ராஜஸ்தான் மாநில முத்திரைத்தாள் சட்டம் 1998-ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி, நிதித்துறையால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததை ரத்து செய்து, மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படும் எல்லா விதமான நீதித்துறை அல்லாத பதிவுப் பணிகளுக்கும் 10 சதவீதம் கூடுதல் முத்திரைதாள் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இந்த கட்டணமானது அரசின் உத்தரவுப்படி மாநிலத்தில் உள்ள பசுக்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான அடிப்படைக் கட்டுமானங்களை மேற்கொள்வதற்காக பயணப்படுத்தபப்டும்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வாடகை ஒப்பந்தங்கள், குத்தகை ஒப்பந்தங்கள் மற்றும் அடமான பாத்திரங்கள் தயார் செய்வோர் கடும் பாதிப்புக்குளாவார்கள் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.