மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியுடன் திடீர் சந்திப்பு
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதுதில்லி: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியா - பங்களாதேஷ் இடையே, 50-க்கும் மேற்பட்ட நதிகள் பாய்கின்றன. ஆனால், நதி நீர் பங்கீடு தொடர்பாக இரு நாடுகள் இடையே விரிவான ஒப்பந்தம் ஏதும் செய்யப்படவில்லை. இதனிடையே, சிக்கிம் மாநிலத்தில் உருவாகி, மேற்கு வங்கம் வழியாக பங்களாதேஷுக்கு பாயும் டீஸ்டா நதியில் பங்கீடு பெற்று வரும் பங்களாதேஷ், அதன் அளவை அதிகரித்து ஒப்பந்தம் போட முயன்று வருகிறது. இதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், பங்களாதேஷ் பிரதமர் திருமதி. ஷேக் ஹசீனாவின் இந்திய பயணத்தை ஒட்டி, டீஸ்டா நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் குறித்து விவாதிக்க, மம்தா பானர்ஜி, கடந்த 4 நாட்களாக தில்லியில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோதியை, மம்தா பானர்ஜி தில்லியில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பிரதமருடனான சந்திப்பில் டீஸ்டா நதி நீர் பங்கீடு குறித்தும், மேற்குவங்க மாநிலத்தில் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்தும் விவாதித்ததாகவும், திட்டங்களுக்கான நிதியை வழங்க கோரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.