ஒடிஸா சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பெண்கள் மீதான வன்கொடுமை தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் தாரா பிரசாத் பஹினிபட்டி எழுப்பிய கேள்விக்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்னாயக் பதிலளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஒடிஸாவில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 5,935 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. இவற்றில் 3,040 வழக்குகளின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஆபாச விடியோக்களால் 175 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 2015-ம் ஆண்டில் 42 வழக்குகளும், 2016-ம் ஆண்டில் 40 வழக்குகளும், நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே 93 வழக்குகள் பதிவாகியுள்ளன.
2017-ம் ஆண்டில் இதுபோன்ற சைபர் கிரைம் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது. மேலும் 2015 முதல் 2017 வரை 1,261 சைபர் குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளன.
அதுபோல 2,286 பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2015-ல் பதிவாகியுள்ளன. இவற்றில் 109 வழக்குகள் கூட்டுப்பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களாகும். 2016-ம் ஆண்டில் 2,144 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 96 வழக்குகள் கூட்டுப்பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களாகும்.
தற்போது 2017-ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே 1,505 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 83 வழக்குகள் கூட்டுப்பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களாகும் என்று தெரிவித்தார்.