மம்தா பானர்ஜி கடந்த 2011-ஆம் ஆண்டில் முதல்வராகப் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை மேற்கு வங்கத்தில் 40 மதக் கலவரச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கீய குற்றம்சாட்டினார்.
மேற்கு வங்க பாஜகவின் மாநில செயற்குழுக் கூட்டம் மால்டா நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் மேலிடப் பார்வையாளரான கைலாஷ் விஜய்வர்கீய பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. மம்தா முதல்வராகப் பொறுப்பேற்ற 2011-இல் இருந்து இதுவரை 40 மதக் கலவரச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கலவரக்காரர்களுடன் காவல்துறையினரும் இணைந்து செயல்பட்டனர்.
மாநில அரசு அதிகாரிகளில் ஒரு பகுதியினர் சீட்டு நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியாது. இந்தக் காரணங்களாலேயே
மாநிலத்துக்கு முதலீடுகள் வருவதில்லை.
மாநில தொடக்கக் கல்வியில் வங்கதேசக் கலாசாரத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு திணிக்கிறது. இதற்கு எதிராக எங்கள் கட்சி விரைவில் ஓர் இயக்கத்தைத் தொடங்கும். எங்கள் கட்சி பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்துவதற்கு மாநில அரசு நிர்வாகத்திடம் அனுமதி கிடைப்பதில்லை. இந்த செயற்குழுக் கூட்டம் நடைபெறும் அரங்குக்கு வெளியே உள்ள சுவரொட்டிகளும் கிழிக்கப்பட்டுள்ளன.
எனவே, "ஜனநாயகம் காப்போம் - கலாசாரம் காப்போம் - மேற்கு வங்கத்தைக் காப்போம்' என்ற இயக்கத்தை பாஜக விரைவில் தொடங்கும்.
மாநில அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி கடன் சுமை இருந்தபோது மம்தா பானர்ஜி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். தற்போது அந்தச் சுமை 3.60 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. எனினும், மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என்றார் அவர்.