பெங்களூரூ: தமிழகத்தின் ஜல்லிக்கட்டைப் போலவே நீதிமன்ற உத்தரவால் தடைபட்டுள்ள, கர்நாடகத்தின் பாரம்பரியமான கம்பளா எனப்படும் எருமைப் பந்தய விளையாட்டுக்கு அனுமதி அளிக்க கோரி பெங்களூருவில் இன்று போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வெகுமக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. அதனை அடுத்து மாநில அரசு சார்பில் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல் கர்நாடகத்தின் பாரம்பரியமான கம்பளா எனப்படும் எருமைப் பந்தய விளையாட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவுப் போராட்டம் போன்றே சமூக வலைத்தளங்கள் மூலம் இளைஞர்கள் ஒன்றிணைந்து போராடத் தொடங்கி உள்ளனர். இதனால், பொதுமக்கள் கூடும் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், போலீஸ் பாதுகாப்பையும் மீறி தட்சிண கன்னட மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி பெரும் பேரணி நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். மூடாபித்ரியில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் சுமார் 200 எருமைக் காளைகளுடன் திரண்ட போராட்டக்காரர்கள், அங்கிருந்து 4 கிமீ தூரம் பேரணியாகச் சென்று கடற்கரை பகுதியில் உள்ள கம்பளா டிராக்கில் போராட்டத்தை நிறைவு செய்தனர்.
இந்த மாபெரும் பேரணியின்போது கம்பளாவுக்கு அனுமதி அளிக்கும் அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பதாகைகளுடன் முழக்கமிட்டனர்.