சட்டப்பேரவை விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது: மத்திய அரசு
சட்டப்பேரவை விவகாரத்தில் அரசியல் சாசனப்படி நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புது தில்லி: சட்டப்பேரவை விவகாரத்தில் அரசியல் சாசனப்படி நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து மாஃபா பாண்டியராஜன் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றத்துக்கு சட்ட ஆலோசனை அளிக்க மத்திய தலைமை வழக்குரைஞரின் உதவியை உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் சட்டப்பேரவை சபாநாயகரின் உரிமை என்ன, அவருக்குள்ள அதிகாரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் உதவியைக் கோரியிருந்த நிலையில், மத்திய கூடுதல் தலைமை வழக்குரைஞர் வேணுகோபால், தான் ஏற்கனவே இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு ஆலோசனை வழங்கி வருவதால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு உதவ முடியாது என்று மறுத்திருந்தார்.
இதையடுத்து, மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்துக்கு சட்ட உதவி வழங்க கூடுதல் தலைமை வழக்குரைஞர் ரஞ்சித்குமார் நியமிக்கப்பட்டார்.
அவர் இன்று உச்ச நீதிமன்றத்தில் தனது வாதத்தை முன் வைத்தார். அப்போது, சட்டப்பேரவை நடவடிக்கைகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. அரசியல் சாசனப் பிரிவு 212ன் படி பேரவை நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும், மாஃபா பாண்டியராஜன் தொடர்ந்த வழக்கில், சட்ட உதவி வழங்க கூடுதல் தலைமை வழக்குரைஞர் ரஞ்சித்குமார் 2 வார கால அவகாசம் கோரினார். இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.