அஸ்ஸாம் மாநிலத்தில் மழையால் பலியானவர்களின் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாள்களான கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அஸ்ஸாம், ஒடிசா, ஹிமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மழை வெள்ளத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
அஸ்ஸாமில் திங்கள்கிழமை ஒரே நாளில் 5 பேர் மழை, வெள்ளத்தால் உயிரிழந்தனர். இதனால், பலியானவர்களின் எண்ணிக்கை 65-ஆக அதிகரித்துவிட்டது.
மாநிலத்தின் பல்வேறு கிராமப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களில் பலர் அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காஸிரங்கா வனவிலங்குகள் சரணாலயத்தின் 28 சதவீத நிலப்பரப்பு நீரில் மூழ்கிவிட்டது. ஏராளமான விலங்குகளும் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு போதுமான உணவு, மருந்து உள்ளிட்டவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், வெள்ளப் பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியை துரித்தப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு மாநில முதல்வர் சர்வானந்த சோனோவால் உத்தரவிட்டுள்ளார்.
ஒடிஸாவில் இருவர் பலி: ஒடிஸாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள கஞ்சாம் மாவட்டத்தில் திங்கள்கிழமை பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்தனர்.
இதனிடையே, ஹிமாசலப் பிரதேசத்தில் ஒரே பகுதியில் கடந்த சில நாள்களாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது. பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி வாகனத்தின் ஓட்டுநர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.