சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பாக அகில இந்திய வர்த்தகர் சங்கங்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) விளக்கக் கையேட்டை திங்கள்கிழமை வெளியிட்டது.
இது தொடர்பாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீண் கண்டேல்வால் செய்தியாளர்களிடம் கூறியது: இந்திய பொருளாதாரத்தை ரொக்கமில்லா பொருளாதாரமாக மாற்றும் பிரதமரின் கனவுத் திட்டங்களில் ஒன்றாக ஜிஎஸ்டி உள்ளது. நாடு முழுவதும் ஜிஎஸ்டி ஒரு வாரத்துக்குள் அமலாக உள்ளது.
இருப்பினும், ஜிஎஸ்டியின் அடிப்படை அம்சங்கள், விதிகள், கட்டுப்பாடுகள் குறித்து பெரும்பாலான வணிகர்கள் அறிந்திருக்கவில்லை. தற்போதுள்ள வாட், கலால், சேவை உள்ளிட்டவற்றுக்கான தற்போதையை வரி விதிப்பு முறையைக் காட்டிலும், மாறுபட்டுள்ள தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை குறித்து அனைத்து வணிகர்களும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற சூழலில் ஜிஎஸ்டி தொடர்பான முக்கியத் தகவல்கள் அடங்கிய இந்த விளக்கக் கையேட்டை வெளியிட்டுள்ளோம். ஜிஎஸ்டி குறித்து வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சிஏஐடி தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மாஸ்டர் கார்டு, எச்டிஎஃப்சி, டேலி ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து நாடு முழுவதும் 130 இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கடந்த மே 1-ஆம் தேதி முதல் நடத்தி வருகிறோம்' என்றார் அவர். பேட்டியின் போது, சிஏஐடியின் தேசியத் தலைவர் பி.சி. பர்தீயா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.