புதுதில்லி: அதிகாரப்பூர்வமான தேர்தல் முடிவுகளை முறைகேடாக வளைத்து பாஜக திருடியுள்ளது என்று காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல்முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனித்த பெரிய கட்சியாக வெற்றி பெற்றிருந்த போதிலும் யாருக்கும் ஆட்சியமைக்க தேவையான அளவு தனிப்பெரும்பான்மை கிடைக்கவேயில்லை.
இந்நிலையில் இந்த இரு மாநிலங்ககளிலும் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உதவியுடன் பாஜக ஆட்சியமைக்க உள்ளது. கோவா முதலமைச்சராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நாளை பொறுப்பேற்க உள்ளார். மணிப்பூரிலும் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரி உள்ளது.
பாஜகவின் இந்த செயலை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், 'தேர்தலில் இரண்டாவதாக வந்த ஒருகட்சிக்கு ஆட்சியமைக்க எந்த உரிமையும் இல்லை. இத்தகைய தனது செயல்பாடுகளினால் தேர்தல் முடிவுகளை முறைகேடாக வளைத்து பாஜக திருடியுள்ளது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
மற்றொரு காங்கிரஸ் தலைவரான திக்விஜய் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில், ' மக்கள் சக்தியை பணத்தின் சக்தி வென்றுள்ளது. கோவாவில் ஆட்சியமைக்க தேவையான அளவு ஆதரவு திரட்ட முடியாமைக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.