புதுதில்லி: அலைபேசி செயலியை அடிப்படையாக கொண்டு செயல்படும் வாடகை கார் சேவை நிறுவனமான 'உபேர்' தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்காக புதிதாக 'செல்ஃப்பி செக்கிங்' முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் வலைப்பூ ஒன்றில் இன்று வெளியாகியுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்த முறையின்படி புதிதாக ஒரு சவாரியை ஏற்றுக் கொள்வதற்கு முன்னால் வாகன ஓட்டுனர்கள் தங்களுடைய செல்ஃப்பி புகைப்படம் ஒன்றை எடுத்து உபேர் செயலியில் பதிவிடவேண்டும்.இவ்வாறு அவர்கள் எடுக்கும் புகைப்படமானது ஏற்கனவே நிறுவனத்தில் பதியப்பட்டுள்ள அவர்களது புகைப்படத்துடன் உடனடியாக ஒப்பிடப்படும். இதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 'மைக்ரோசாப்ட் காக்னிட்டிவ் சர்வீஸ்' என்ற பிரத்யேக சேவை பயன்படுத்தப்படும்..
அவ்வாறு புகைப்படங்கள் சரியாக இல்லாவிடின் அந்த ஓட்டுனரது கணக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படும். உபேர் நிறுவனம் பின்னர் அந்த விவகாரத்தை கவனிக்கும். இதன் மூலம் ஏமாற்று வேலைகள் தடுக்கப்படுவதுடன், வாகன ஓட்டுநர்களின் கணக்கும் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அந்த வலைப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உபேர் நிறுவன தலைமை பாதுகாப்பு அதிகாரியான ஜோ சல்லிவன் கூறும் பொழுது, ' இதன் மூலம் சரியான ஒரு நபர் ஓட்டுநராக இருப்பதுஉறுதி செய்யபப்டும். இதன் மூலம் வடிக்கையாளர்களுக்கான பாதுகாப்பு வசதிகளும் மேம்படுத்தப்படும். இதன் மூலம் தொலைநோக்கு பார்வையில் பார்க்கும் பொழுது வாடிக்கையாளர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரின் நலனும் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த சேவையானது தற்பொழுது புதுதில்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மட்டுமே பயன்பாட்டுக்கு வருகிறது.