லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற நான்கு நாட்களில் கடமையில் கவனக்குறைவாக இருந்த 100 காவலர்கள் தற்காலிக பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதாவின், யோகி ஆதித்யநாத் தலைமையிலான புதிய அரசு கடந்த ஞாயிறுஅன்று பதவியேற்றுக் கொண்டது. அரசு பதவியேற்றுக் கொண்ட சில மணி நேரங்களிலேயே மாநில காவல்துறைத் தலைவர் டி.ஜி.பி ஜாவீத் அஹ்மத் அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் 'வீடியோ கான்பரன்சிங்' முறையில் சில உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதன்படி மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கை அமல் செய்வதில் தீவிரத் தன்மை காட்டப்பட வேண்டும்.அதில் யாராவது சுணக்கம் காட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே அந்த உத்தரவாகும்.
அதன்படி கடந்த நான்கு நாட்களில் மாநிலம் முழுவதும் கடமையில் கவனக்குறைவாக இருந்த 100 காவலர்கள் தற்காலிக பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.குறிப்பாக காசியாபாத், மீரட் மற்றும் நொய்டா ஆகிய மூன்று பகுதிகளில்தான் இந்த எண்ணிக்கை அதிகமாகும். இவர்களில் பெரும்பாலானாவர்கள் அடிப்படைக் காவலர்கள் ஆவார்கள்.