நில மோசடி: லாலு பிரசாத் வீடு உட்பட 22 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
ரூ.1000 கோடி அளவுக்கு நில மோசடி வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் வீடு உட்பட 22 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
புது தில்லி: ரூ.1000 கோடி அளவுக்கு நில மோசடி வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் வீடு உட்பட 22 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
லாலுவின் மகன் குப்தா மற்றும் தில்லி, குர்கான், ரேவரி உள்ளிட்ட பல இடங்களில் உள்ள தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்ட்கள் வீடு, அலுவலகம் என பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மேற்கொண்ட பினாமி நிலத்தை சட்டத்துக்கு விரோதமாக மாற்றிய வழக்கில் தொடர்புடைய பலரது வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
Advertisement
இந்த சோதனையில் சுமார் 100 வருமான வரித்துறை அதிகாரிகளும், ஏராளமான காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.
லாலு பிரசாத் யாதவ், அவரது மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான மிஸா பார்தி, பிகார் அமைச்சர்களாக இருக்கும் அவரது இரண்டு மகன்களும் ரூ.1000 கோடி அளவுக்கு பினாமி சொத்துகளை மாற்றியதாக மாநில பாஜக குற்றம்சாட்டியிருந்தது. இந்த மோசடி குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
லாலு பிரசாத்தின் குடும்பத்தினர் பெயரில் இயங்கும் பல நிறுவனங்கள், ஊழியர்கள் இல்லாமல், எந்த தொழிலும் செய்யாமல், லாப நட்டம் இல்லாமல் இயங்குகின்றன. இவை அனைத்து நிலம் மோசடி செய்யவே துவங்கப்பட்டதாக மத்திய இணை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.