தின்பண்ட பாக்கெட்டில் இருந்த சிறு பொம்மை: சிறுவனின் உயிருக்கு உலை வைத்த கொடூரம்!
தின்பண்ட பாக்கெட்டில் இருந்த சிறு பொம்மையை உணவுப்பொருள் என நினைத்து கடித்து மென்ற நான்கு வயதுச் சிறுவன் உயிரிழந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
அமராவதி: தின்பண்ட பாக்கெட்டில் இருந்த சிறு பொம்மையை உணவுப்பொருள் என நினைத்து கடித்து மென்ற நான்கு வயதுச் சிறுவன் உயிரிழந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது எலூரு என்னும் நகரம். இங்கு வசிக்கும் மீசலா நிரீக்ஷன் என்னும் நான்கு வயது சிறுவனுக்குத்தான் இத்தகைய துக்கமான முடிவு நேர்ந்துள்ளது.
இச்சிறுவன் நேற்று தனது வீட்டில் அமர்ந்து கடையில் வாங்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் பொட்டலத்தினை தின்று கொண்டிருந்தான். அப்பொழுது இத்தகைய பாக்கெட்டுகளில் குழநதைகளை ஈர்ப்பதற்காக போடப்படும் மிகச் சிறிய அளவிலான பொம்மை ஒன்றை, சரியாகக் கவனிக்காமல், உருளைக்கிழங்கு சிப்ஸ் என்று நினைத்து எடுத்து கடித்து மென்று விழுங்க ஆரம்பித்துள்ளான்.
Advertisement
இதன் காரணமாக சிறுவன் உடனேயே வாந்தி எடுக்கத் துவங்கியுள்ளான். ஆனால் குறிப்பிட்ட பொம்மை அவனது தொண்டையில் சிக்கிக் கொண்டதால் அவன் மூச்சு திணறலுக்கு உள்ளாகி மயக்கமாகியுள்ளான்.
அவனது சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்த அவனது தாய், உடனடியாக அவனை அருகில் உள்ள அரசாங்க மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவன் இறந்தே கொண்டு வரப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் அந்த சிறுவனது பெற்றோர் குறிப்பிட்ட தின்பண்ட தயாரிப்பாளருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.