மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சிக்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை, ஐ.நா. மூலம் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை, ஐ.நா. மூலம் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட முயற்சியை சீனா மீண்டும் தடுத்துவிட்டது.
இதனை பெய்ஜிங்கில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. உரிய விதிகளின் அடிப்படையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பைக் காக்கும் வகையில் சீனா இந்த விஷயத்தில் செயல்பட்டதாக அந்நாடு விளக்கமளித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமானப் படைத் தளத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியவர் மசூத் அஸார் என்று விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கடந்த ஆண்டு (2016) மார்ச் மாதம் கோரிக்கை விடுத்தது. 15 உறுப்பினர்களைக் கொண்ட அந்த கவுன்சிலில், இந்தியாவின் கோரிக்கைக்கு, சீனா மட்டும் ஆதரவு அளிக்கவில்லை.
அதைத் தொடர்ந்து, மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள், ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால், சீனாவின் ஆதரவு இல்லாததால், அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
இதனிடையே, மசூத் அஸாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முடிவை 6 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாக, சீனா கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்திருந்தது. பிறகு, அந்த முடிவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பதாக சீனா தெரிவித்திருந்தது. சீன அரசின் அவகாசம், வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது.
இதையடுத்து, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து மசூத் அஸாரை ஐ.நா. மூலம் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தைக் கொண்டுவர முயற்சித்தது. ஆனால், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான சீனா இதனை ஏற்க மறுத்துவிட்டது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகள் அனைத்தும் ஏற்றால்தான் அதனைத் தீர்மானமாக நிறைவேற்ற முடியும் என்பதால், கருத்தொற்றுமை ஏற்படாத காரணத்தால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதன் மூலம் மசூத் அஸாரை பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியாவின் முயற்சியை சீனா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகத் தடுத்துவிட்டது.