புதுதில்லி: பாதுகாப்பு காரணங்களுக்காகவே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மகளின் விமானப் பணிப்பெண் வேலையை மாற்றியுள்ளதாக தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மகளான சுவாதி, தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தில், ஏர் இந்தியா விமானத்தின் நீண்ட தூர விமானங்களான போயிங் 787, போயிங் 777 ஆகியவற்றில் விமான பணிப்பெண்ணாக விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். இவர் தனது தந்தை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் தனது பணியை தொடர்ந்து செய்து வந்தார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி குடியரசுத் தலைவரின் மகள் என்ற முறையில் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அவருடன் எப்பொழுதும் பாதுகாவலர்கள் இருக்க வேண்டும்.
ஆனால், பாதுகாவலர்கள் அவருடன் விமானத்தில் பயணிக்க முடியாது என்பதால் அவருக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் நீடித்து வந்தது.
இதையடுத்து அவரது பணியை ஏர் இந்தியா நிர்வாகம் மாற்றியுள்ளதாகவும், தற்போது தில்லியில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவன தலைமையகத்தில் அவருக்கு ஒருங்கிணைப்பு பிரிவில் பணி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.