முகப்பு
இந்தியா

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் முறைப்படி நடந்தது: நிர்மலா சீதாராமன் விளக்கம்

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் முறைப்படி நடந்ததாக மத்திய பாதுகாப்புத்துத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

Updated On : 17 நவம்பர், 2017 at 6:37 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:38 PM

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் முழுவதையும் தனியொரு தொழிலதிபர் ஆதாயம் அடையும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி செய்துள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் குற்றம்சாட்டினார்.

மேலும், இந்த ஒப்பந்தமானது பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனமும், இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனமும் இணைந்து டஸால்ட் ரிலையன்ஸ் ஏவியேஷன் என்ற கூட்டு நிறுவனத்தை கடந்த அக்டோபர் 2-ந் தேதி உருவாக்கின. 

எனவே இவ்விவகாரத்தில் தொழிற்துறையைச் சேர்ந்த தனது நண்பர் ஆதாயம் அடையும் வகையில் ஒப்பந்த விதிகளில் திருத்தம் செய்துள்ளதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் மீதான காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு, அவர்களின் தோல்வியை காட்டுகிறது. ஏனென்றால் இந்த ஒப்பந்தம் இந்த அளவுக்கு தாமதமாக நடந்ததற்கு காங்கிரஸ் தான் காரணம்.

கடந்த 2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சி செய்தது. அப்போது முதலே இதுதொடர்பான ஒரு முடிவுக்கு வர முடியாமல் அக்கட்சி திணறியது. மேலும் இதற்காக 12 வருடங்களுக்கும் மேலாக இரு நாடுகளிடையே பேச்சுவராத்தை நடைபெற்று வந்தது.

2014-ம் ஆண்டில் நரேந்திர மோடி இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்புதான் இந்த சிக்கல் ஒரு முடிவுக்கு வந்தது. மேலும் இந்தத் திட்டம் புத்துயிர் பெற்றது. பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்திய விமானப்படையை வலிமைப்படுத்தும் நோக்கத்தோடு இந்த ரஃபேல் போர் விமான ஒப்பந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது முழுவதும் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டது. எனவே இதுதொடர்பான பொய் குற்றச்சாட்டினை முன்வைப்பவர்கள் வெட்கப்பட வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.