விவசாயிகள் தொடர் மரணம்: அமைச்சர் மேல் பூச்சிக்கொல்லி மருந்தினை தெளிக்கப் பாய்ந்த விவசாயி!
பூச்சிக் கொல்லி மருந்துகளின் நச்சு வாயு காரணமாக தொடர்ச்சியாக விவசாயிகளின் மரணங்கள் நிகழ்வதால் அதிருப்தியடைந்த விவசாயி ஒருவர், விவசாயத்துறை அமைச்சர் மேல் பூச்சிக்கொல்லி மருந்தினை தெளிக்கப்...
யவத்மால் (மஹாராஷ்டிரா): பூச்சிக் கொல்லி மருந்துகளின் நச்சு வாயு காரணமாக தொடர்ச்சியாக விவசாயிகளின் மரணங்கள் நிகழ்வதால் அதிருப்தியடைந்த விவசாயி ஒருவர், விவசாயத்துறை அமைச்சர் மேல் பூச்சிக்கொல்லி மருந்தினை தெளிக்கப் பாய்ந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மஹாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பருத்தி மற்றும் சோயா விளைநிலங்களில் தொடர்ச்சியாக அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. இவற்றில் இருந்து வெளிப்படும் நச்சு வாயுவினை அதிக அளவில் சுவாசிக்க நேர்வதன் காரணமாக அங்கு விவசாயிகள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் 18 விவசாயிகள் இதன் காரணமாக பலியாகியுள்ளனர்.
தற்பொழுது இதன் காரணமாக எழுந்துள்ள சூழ்நிலையினால் மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் பூச்சிக்கொல்லிகளினால் உண்டாகும் தீயவிளைவுகள் பற்றியும் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான உடனடி நடவடிக்கைகள் பற்றியும் ஆராய உயர் மட்டக் குழு ஒன்றை அமைத்துள்ளார். அத்துடன் உடனடி நிவாரணமாக மரணமடைந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
சூழலின் பதற்றத்தினைத் தணிக்க மாநில விவசாய அமைச்சர் சதாபூ ஹோட் கிராமங்களுக்குப் பயணம் செய்து வருகிறார். தனது பயணத்தின் ஒருபகுதியாக யவத்மாலில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கலம் என்னும் கிராமத்திற்கு வந்திருந்தார். அங்கு இந்த பிரச்சினை குறித்தும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் அவர் பேசிக்கொண்டிருந்தார்.
அப்பொழுதுஅந்த கூட்டத்திலிருந்த விவசாயி ஒருவர் அமைச்சரை நோக்கி வேகமாக வந்து, தன் கையில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்து ஒன்றினை அமைச்சர் மீது தெளிக்க முயன்றார். ஆனால் விரைந்து செயல்பட்ட அங்கிருந்த காவலர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் அந்த விவசாயியை மடக்கி பிடித்தனர். அமைச்சர் எந்த பாதிப்புமின்றித் தப்பினார்.
பின்னர் நடந்த விசாரணையில் அந்த விவசாயின் பெயர் சிக்கந்தர் ஷா என்பது தெரிய வந்தது. போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.