உறவினர் திருமண நிகழ்வுக்காக வந்த 75 முதியவர் இறந்து 40 நாட்களுக்குப் பின் தெரியவந்த சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் ராஜமுந்திரியைச் சேர்ந்தவர் மூர்த்தி (75 வயது). இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், உறவினர் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக மூர்த்தி மட்டும் ஹைதராபாத் வந்தடைந்தார். ஹைதராபாத்தின் புறநகர் பகுதியான எல்.பி.நகர் என்ற இடத்தில் உள்ள அவரது மகளின் அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியுள்ளார்.
இதனிடையே, மூர்த்தி திருமணத்துக்காக ஹைதராபாத் வந்த 40 நாட்களாக தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருந்த காரணத்தால் அமெரிக்காவில் வசிக்கும் அவரது மனைவி மற்றும் மகள் உறவினர்களிடம் விவரத்தை தெரிவித்தனர்.
இதையடுத்து, மூர்த்தி தங்கியிருந்த குடியிருப்புக்குச் சென்ற அவரது உறவினர்கள் வீடு பூட்டியிருந்ததால் திரும்பி விட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர், சோதனை மேற்கொண்ட போது வீட்டின் உள்ளே மூர்த்தி இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. உடல்நலன் காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
திருமணத்துக்கு வந்த ஒருவர் இறந்து 40 நாட்களுக்குப் பின் தெரியவந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.