ரயில் நிலையங்களில் உணவகங்களை பராமரிப்பதற்காக தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணைக்காக வரும் 16-ஆம் தேதி ஆஜராகுமாறு பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவிக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ' தில்லியில் புதன்கிழமை அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்பு ராப்ரி தேவி ஆஜராக வேண்டி இருந்தது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, வரும் 16-ஆம் தேதி ஆஜராகுமாறு அவருக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பப்பட்டது' என்று தெரிவித்தனர்.
இந்த வழக்கில், அவர் ஏற்கெனவே 2 முறை நேரில் ஆஜராகாமல் தவிர்த்திருக்கிறார்.
மூன்றாவது முறையாக புதன்கிழமையும் அவர் ஆஜராகவில்லை. அதற்கான காரணம் ஏதும் ராப்ரி தரப்பில் தெரிவிக்கப்பட்டதா? என்று தெரியவில்லை.
இந்த வழக்கில், ராப்ரி தேவியின் மகனும், பிகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 9 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அண்மையில், இதுதொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், ராப்ரி தேவியின் கணவருமான லாலு பிரசாத்திடமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி, ஒடிஸா மாநிலம் புரி ஆகிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் ஐஆர்சிடிசி உணவகங்களை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்ய
அப்போதைய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத், பினாமி பெயரில் லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது.