நதிகளை மீட்போம் பிரசார இயக்கத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருவதாக ஈஷா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.
நதிகளை மீட்போம் என்ற பிரசார இயக்கத்தை கடந்த 3}ஆம் தேதி கோவையில் ஜக்கி வாசுதேவ் தொடங்கி வைத்தார். அன்றைய தினம் முதல் அவர் நாடு முழுவதும் 16 மாநிலங்களில் முக்கிய நகரங்களுக்கு 8,000 கி.மீ. வரை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக மத்தியப் பிரதேச மாநிலம், போபால் நகருக்கு சனிக்கிழமை வந்தார். அங்கு ஒரு வேனை அவர் இயக்கிச் சென்று நதிகள் மீட்பு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அரசியல் ரீதியாக பல்வேறு மாநிலங்கள் வேறுபட்டிருந்தாலும் நதிகளை மீட்போம் பிரசாரத்துக்கு அவை அனைத்தும் ஆதரவு அளிக்கின்றன. நதிகளின் பாதுகாப்புக்காக மாநிலங்கள் அனைத்தும் இணைந்து குரல் கொடுப்பது இந்தத் தேசத்துக்கு மிகப் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
நதிகளைப் பாதுகாப்பது தொடர்பான கொள்கையை வகுப்பது இதுவரை சவாலாக இருந்து வந்தது. சுதந்திரம் கிடைத்த 70 ஆண்டுகளில் முதல்முறையாக அந்தப் பணியை நாங்கள் முன்னெடுத்திருக்கிறோம். நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. நதிகளை இழந்து வருகிறோம் என்பதை எடுத்துரைக்கிறோம் என்றார் ஜக்கி வாசுதேவ். அவர் தனது பயணத்தை அக்டோபர் 2}ஆம் தேதி தில்லியில் நிறைவு செய்கிறார்.