முகப்பு
இந்தியா

நாட்டு மக்களின் பொறுமையை சோதிக்கிறீர்கள்: வெங்கய்ய நாயுடு ஆவேசம்

மாநிலங்களவையை தொடர்நது முடக்கி நாட்டு மக்களின் பொறுமையை சோதிக்கிறீர்கள் என்று வெங்கய்ய நாயுடு புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

Updated On : 4 ஏப்ரல், 2018 at 2:57 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:09 PM

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் பல்வேறு காரணங்களுக்காக எதிர்கட்சிகளால் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது. பணமதிப்பிழப்பு விவகாரம், சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, எல்லைப் பிரச்னை போன்ற காரணங்களுக்காக காங்கிரஸ், சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் தொடர்பாக தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், காவிரி விவகாரம் தொடர்பாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அவையை தொடர்ந்து முடக்கி வருகின்றன.

இதனால் எவ்வித விவாதங்களும் இன்றி நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் இதர செயல் திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழலுக்கு உள்ளானது. அதிலும், மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், வழக்கம்போல் தெலுங்கு தேசம் (ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து), அதிமுக (காவிரி மேலாண்மை வாரியம்), காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் (எஸ்.சி, எஸ்.டி சட்ட திருத்தம்) உள்ளிட்ட காரணங்களுக்காக புதன்கிழமை மாநிலங்களவையில் போராட்டம் நடத்தின. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

அப்போது பேசிய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, நாட்டுக்கான முன்னேற்ற திட்டங்களை அமல்படுத்த உதவுங்கள். உங்கள் விவகாரங்களை அவையில் விவாதிக்கலாம். அதுபோல மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த அனுமதி அளியுங்கள். இதுவரை எவ்வித நலத்திட்டங்களும் அமல்படுத்தப்படவில்லை. நீங்கள் நாட்டு மக்களின் பொறுமையை சோதிக்கிறீர்கள். அவர்களுக்கு இங்கு நடப்பது அனைத்தும் நன்கு தெரியும். இது அவர்களை கோபப்படுத்தியுள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.