முகப்பு
இந்தியா

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ஜேட்லி

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு(65) தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திங்கள்கிழமை டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்த பிறகு அவர் வீடு திரும்பினார்.

Updated On : 10 ஏப்ரல், 2018 at 4:56 AM
பகிர்:

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு(65) தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திங்கள்கிழமை டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்த பிறகு அவர் வீடு திரும்பினார்.
நீரிழிவு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள அருண் ஜேட்லி, சிறுநீரகக் கோளாறு மற்றும் அதனால் ஏற்படும் தொற்றுகளால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக, அரசு அலுவல்கள் எதிலும் பங்கேற்கவில்லை. மாநிலங்களவை எம்.பி.யாக அவர் அண்மையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பதவியேற்பு நிகழ்விலும் கலந்துகொள்ளவில்லை.
வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த அவர், மருத்துவர்களின் அறிவுரைப்படி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களாக அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே, முதலில் டயாலிசிஸ் சிகிச்சை மூலம் அவருடைய உடல் தொந்தரவுகளை சரிசெய்து விடலாம் என்று மருத்துவர்கள் முடிவு செய்தனர். சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை கட்டாயம் தேவைப்படுகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றும் அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜேட்லிக்கு திங்கள்கிழமை டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து 2 மணி நேரம் கழித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 
சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்பட்டால், அதை அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த பிரபல சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர் சந்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவ குழுவினர் மேற்கொள்வர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.