ஐஆர்சிடிசி ஹோட்டல்களை பராமரிக்கும் ஒப்பந்தப்புள்ளி அளிக்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகையை திங்கள்கிழமை தாக்கல் செய்தது.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:
தில்லியில் உள்ள நீதிமன்றத்தில் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையை திங்கள்கிழமை தாக்கல் செய்தது. அதில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராஃப்தி தேவி, மகன் தேஜஸ்வி உள்ளிட்ட 14 பேரின் பெயர்களை சிபிஐ குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக ராஃப்ரி தேவியிடம் சிபிஐ அண்மையில் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது, ராஞ்சி மற்றும் புரியில் இருக்கும் ஐஆர்சிடிசிக்கு சொந்தமான 2 ஹோட்டல்களை பராமரிப்பது தொடர்பான ஒப்பந்தப்புள்ளி, சுஜாதா ஹோட்டல்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது. இதற்கு பிரதிபலனாக, சுஜாதா ஹோட்டல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமாக பாட்னாவில் இருக்கும் ரூ.1,000 கோடி மதிப்புடைய நிலத்தின் உரிமை, லாலுவின் குடும்பத்தினரின் நிறுவனத்தின் பெயருக்கு மாற்றப்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியது.
இதுதொடர்பாக லாலு பிரசாத் உள்ளிட்டோர் மீது சிபிஐ ஊழல் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதேபோல், லாலு உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது.