இந்திய அரசியலமைப்பை காங்கிரஸ் அழித்துவிட்டது: அமித்ஷா தாக்கு
இந்திய அரசியலமைப்பை காங்கிரஸ் அழித்துவிட்டது என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா திங்கள்கிழமை குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை காங்கிரஸ் கட்சியும், அம்பேத்கரும் இணைந்து தயாரித்து வழங்கியதாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, ராகுலின் இந்த கருத்து வெட்கக்கேடானது என்று விமரிசித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
இந்திய அரசியலமைப்பை அம்பேத்கருடன் இணைந்து காங்கிரஸ் கட்சி உருவாக்கியுள்ளதாக ராகுல் கூறியிருப்பது அவர்களின் குடும்ப சர்வாதிகராத்தின் வெளிப்பாடு. இதன்மூலம் அம்பேத்கரையும் இழிவுபடுத்தியுள்ளார். அம்பேத்கர் உயிரோடு இருந்தது முதல் இப்போது வரை அவரை நேரு குடும்பம் தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறது.
தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம் என எந்தவொரு அரசியலமைப்பையும் விடாமல் தங்களின் சுயலாபத்துக்காகவும், அரசியல் நோக்கத்துக்காகவும் விமரிசித்து வரும் காங்கிரஸ் இந்திய அரசியலமைப்பை உருவாக்கியதாக கூறுவதுதான் இதில் உச்சகட்டம்.
Advertisement
இந்த நேரத்தில் இந்திய அரசியலமைப்பை தாக்கி அழித்து வரும் காங்கிரஸ் கட்சியிடம் இருந்துதான் அதனை காப்பாற்ற வேண்டும். அதுவே தற்போதைய அவசரத் தேவையாகும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அரசுக்கு எதிராக 'இந்திய அரசியலமைப்பை காப்பாற்றுங்கள்' என்றும், பாஜக தான் அரசியலமைப்பை சீர்குலைத்து வருகிறது எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.