சிறுமிகள் பாலியல் வழக்கில் என் கணவர் குற்றவாளியாக அறியப்பட்டால் அவரை தூக்கிலிடுவேன்: பிகார் அமைச்சர் மஞ்சு வெர்மா
பிகார் காப்பக சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் என் கணவர் குற்றவாளியாக அறியப்பட்டால் அவரை தூக்கிலிடுவேன் பிகார் மாநிலத்தின் அமைச்சர் மஞ்சு வெர்மா சனிக்கிழமை தெரிவித்தார்.
பிகார் காப்பக சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் என் கணவர் குற்றவாளியாக அறியப்பட்டால் அவரை தூக்கிலிடுவேன் பிகார் மாநிலத்தின் அமைச்சர் மஞ்சு வெர்மா சனிக்கிழமை தெரிவித்தார்.
பிகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தில் அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) ஒன்று காப்பகத்தை நடத்தி வந்தது. அங்கிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் அண்மையில் வெளியானது. இதையடுத்து, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரஜேஷ் தாகூர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், முசாஃபர்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுக்காப்பு அதிகாரி ரவிகுமார் ரௌஷனும் ஒருவர்.
இந்த கைது நடவடிக்கையை அடுத்து ரவிகுமாரின் மனைவி ஷிவ்குமாரி, 'அமைச்சர் மஞ்சுவின் கணவர் சந்தேஷ்வர் காப்பகத்தில் உள்ள சிறுமிகளின் அறைகளுக்கு அடிக்கடி தனியாக சென்றுள்ளார்' என்று குற்றம்சாட்டினார்.
Advertisement
இதையடுத்து, எதிர்க்கட்சிகள் அமைச்சர் மஞ்சு வெர்மா பதவி விலகுமாறு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சனிக்கிழமை ஒரு நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் மஞ்சு வெர்மா இதுதொடர்பாக கூறிகையில்,
"அரசியல் காரணங்களுக்காக என் மீதும் எனது கணவர் மீதும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். இந்த சம்பவத்தில் எனது கணவருக்கு எந்த தொடர்பும் கிடையாது. அவர் குற்றவாளியாக அறியப்பட்டால், பொதுவெளியில் அவரை தூக்கிலிடுவதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இருக்காது" என்றார்.
பிகார் மாநிலத்தின் துணை முதல்வரும் அமைச்சர் மஞ்சு வெர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்த காரணமாக இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி மாநில அரசு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது.