முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை மாலை 05.05 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
அடல் பிகாரி வாஜ்பாய் மறைவு இந்தியாவை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இது ஒரு சகாப்தத்தின் நிறைவாகும். அவர் தேசத்துக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர். அவருடைய குடும்பத்தினர், பாஜக-வினருக்கு இது மிகவும் சோகமான நிகழ்வாகும்.
அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பாகும். அவருடனான நிறைய நினைவுகள் உள்ளன. என்னைப் போன்ற ஒவ்வொரு பாஜக-வினருக்கும் அவர் தலைசிறந்த முன்மாதிரியாக இருந்துள்ளார். அவரின் கூர்மையான சிந்தனையும், நகைச்சுவை உணர்வையும் என்றும் என் நினைவில் இருக்கும். வாஜ்பாய்-இன் வலிமையான தலைமையின் கீழ் சக்திவாய்ந்த 21-ஆம் நூற்றாண்டு உருவாக காரணமாக இருந்தது.
அவருடைய கொள்கைகள் பலதரப்பட்ட மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தியுள்ளது. வாஜ்பாய் அவர்களின் கடுமையானப் போராட்டங்களால் தான் பாஜக ஒவ்வொரு படியாக வளர்ந்தது. இந்த நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு பாஜக-வின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். அதனால் தான் பாஜக தனிப்பெரும் சக்தியாக உருவானது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.