காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அலிபாபா என்றும், அவரை சுற்றி 40 திருடர்கள் உள்ளதாகவும் பாஜக விமர்சித்துள்ளது.
ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோருக்கு சொந்தமாக தில்லி மெஹ்ரௌலி பகுதியில் உள்ள பண்ணை வீடு, என்எஸ்இஎல் (நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் நிறுவனம்) முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்படும் முக்கிய நபருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக ஊடகமொன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தை முன்வைத்து, ராகுல் காந்தியை பாஜக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
ராகுல் காந்தி, தனக்கு சொந்தமான சொத்தை, ஓர் ஊழல்வாதிக்கு வாடகைக்கு விட்டுள்ளார். ஊழல்வாதியின் பணம், ராகுலின் வங்கிக் கணக்குக்கு சென்றுள்ளது. காங்கிரஸ் என்றாலே ஊழல் என்று அர்த்தமாகிவிட்டது. ராகுலும் ஊழலில் திளைத்தவர்தான் என்றார் அவர்.
மேலும், ராகுல் காந்தியை அலிபாபா என்றும், அவரை சுற்றி 40 திருடர்கள் உள்ளதாகவும் சம்பித் பத்ரா கூறினார். மக்களை ஏமாற்றி, அவர்களது பணத்தை எப்படி கொள்ளையடிக்கலாம் என்பது குறித்து ராகுலுக்கு அந்த 40 திருடர்களும் உதவுகின்றனர். அப்படிப்பட்டவர்கள், பிரதமர் மோடியை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது என்றார் அவர்.