மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளின் இறுதி நிலவரம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, மொத்தம் உள்ள 230 இடங்களில் 114 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. பாஜகவுக்கு 109 இடங்களும், சுயேச்சைகள் 4 இடங்களிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் ஒரு இடத்தில் சமாஜவாதி கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.
பெரும்பான்மைக்கு இன்னும் 2 இடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் பிற கட்சிகள், சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. சமாஜவாதி, 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஏற்கெனவே காங்கிரஸுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில் தற்போது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் ஆதரவு அளித்துள்ளது.
இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
பாஜக பட்டியல் இன மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. பாஜக மீதான அதிருப்தியின் காரணமாகவே மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். பாஜகவுக்கு மாற்று இல்லாத காரணத்தாலேயே காங்கிரஸை தேர்ந்தெடுத்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவளிக்கிறது. தேவைப்பட்டால் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தத் தயார் என்றார்.