புது தில்லி: ஜம்மு காஷ்மீரில் மேலும் ஆறு மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கப்பட்டதற்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் நடைபெற்ற அரசியல் ஸ்திரமற்ற தன்மையின் காரணமாக ஆளுநர் பரிந்துரைப்படி கடந்த 6 மாதங்களாக ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. அந்த ஆட்சி கடந்த வாரம் புதன் கிழமையுடன் (19.12.18) நிறைவடைய இருந்த நிலையில், வியாழன் முதல் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் பரிந்துரை செய்திருந்தார்.
இதுகுறித்து திங்கட்கிழமை (17.12.18) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் தனது பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பி வைத்தது.
அதன்படி ஜம்மு - காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்தார்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் மேலும் ஆறு மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கப்பட்டதற்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.
பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மக்களவையில் எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டிருந்த நிலையில், இது தொடர்பான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொண்டு வந்தார். எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி ஆட்சிஅமல்படுத்தப்பட்டதை அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று விமர்சித்த போதும் தீர்மானம் நிறைவேறியது.