புதுதில்லி: அமெரிக்காவில் வசித்து வரும் கணவர் ஒரு கட்செவி அஞ்சல் மூலம் (வாட்ஸ்அப்) மனைவியை விவாகரத்து செய்துள்ள விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மகளிர், குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக மக்களவையில், மூன்று முறை தலாக் என்று கூறி, மனைவியை விவாகரத்து செய்யும் முத்தலாக் முறைக்குத் தடை விதிக்கும் நோக்கில், முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைப் பாதுகாப்புச் சட்ட மசோதாவை மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. காரசார விவாதங்களுக்குப்பிறகு, மக்களவையில் இந்த மசோதா வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 245 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து, இந்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெங்களூரை சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் தனது கணவர் மீது புகார் கொடுத்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகாரில், அமெரிக்காவில் வசித்து வரும் எனது கணவர் ஒரு கட்செவி அஞ்சல் மூலம் (வாட்ஸ்அப்) முத்தலாக் கொடுத்துள்ளார். எனவே, வெளியுறவுத்துறை அமைச்சகம் இதில் தலையிட்டு அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்த விஷயத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலையிட வேண்டும் என கோரியுள்ளார்.
இந்நிலையில், மத்திய மகளிர், குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி, கணவனால் பாதிக்கப்பட்ட பெங்களூர் பெண்ணுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பக்க பதிவில், கடந்த வியாழக்கிழமை மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் தெரிவிக்கப்பட்டுள்ள முதல் புகார் இதுவாகும். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மூன்று முறை தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்பவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் இந்தச் சட்டத்தில் இடம் உள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் 477 முத்தலாக் விவாகரத்துகள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மருத்துவர் ஒருவர் கட்செவி அஞ்சல் மூலம் (வாட்ஸ்அப்) மனைவியை விவாகரத்து செய்துள்ளார். மற்றொருவர் தனது மனைவி, பிரதமரின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார் என்று குற்றம்சாட்டி முத்தலாக் முறையில் விவாகரத்து செய்துள்ளார்.