தேசிய பாதுகாப்புப் படையின் (என்எஸ்ஜி) தலைமை இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி சுதீப் லடாக்கியா வியாழக்கிழமை பதவியேற்றார்.
கருப்புப் பூனைப் படை என அழைக்கப்படும் தேசிய பாதுகாப்புப் படையினர், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் மட்டுமல்லாது, பிரதமர், முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்பட மிக முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இப்படை செயல்படுகிறது.
இந்நிலையில், என்எஸ்ஜியின் தலைமை இயக்குநராக இருந்த எஸ்.பி.சிங் புதன்கிழமை ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, புதிய தலைமை இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி சுதீப் லடாக்கியா வியாழக்கிழமை பதவியேற்றார்.
முன்னதாக என்எஸ்ஜி தலைமை இயக்குநராக சுதீப் லடாக்கியாவை நியமிக்கும் உத்தரவை, பிரதமர் தலைமையிலான அமைச்சரவை நியமனங்கள் குழு கடந்த 19-ஆம் தேதி பிறப்பித்திருந்தது. அடுத்த ஆண்டு ஜூலை வரை இப்பதவியில் சுதீப் இருப்பார்.
பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவும், விமான கடத்தல் போன்ற சம்பங்களைத் தடுக்கவும் கடந்த 1984-ஆம் ஆண்டில் தேசிய பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.