குக்கர் சின்னம் கோரும் வழக்கு: தில்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்
உள்ளாட்சி தேர்தலில் குக்கர் சின்னம் கோரி, டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனுவுக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பிலும், தமிழக முதல்வர்,
உள்ளாட்சி தேர்தலில் குக்கர் சின்னம் கோரி, டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனுவுக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பிலும், தமிழக முதல்வர், துணை முதல்வர் சார்பிலும் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாக டிடிவி தினகரன் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை கடந்த மாதம் 24-ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம், ஒரு வாரத்தில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கும் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை தில்லி உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) நடைபெறவுள்ளது.
இந்நிலையில், அந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை பதில் அளித்துள்ளது. அதில், 'உள்ளாட்சித் தேர்தல், மாநிலத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகிறது. புதிதாக கட்சி தொடங்கினால் அதைப் பதிவு செய்வதும், அதற்கு தேர்தல் சின்னம் ஒதுக்குவதும் மட்டுமே தலைமைத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது' எனத் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர், துணை முதல்வர் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், 'டிடிவி தினகரன் தனி அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதென்றால் தேர்தல் ஆணையத்தை அணுக வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு பெயரையும், சின்னத்தையும் ஒதுக்கித் தரும்படி கோர முடியாது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.