ராணுவ முகாம் மீது தாக்குதல்: ஜம்முவில் தேடுதல் வேட்டை நீடிப்பு
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்மு அருகே உள்ள ராணுவ முகாமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அங்கு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக ராணுவம்
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்மு அருகே உள்ள ராணுவ முகாமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அங்கு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜம்மு அருகே சஞ்சுவான் பகுதியிலுள்ள ராணுவ முகாமுக்குள் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ராணுவ சீருடை அணிந்து கொண்டு சனிக்கிழமை திடீரென புகுந்தனர். அந்த முகாமினுள் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் பதுங்கிக் கொண்டு, ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, அந்த குடியிருப்பை சுற்றிவளைத்த ராணுவத்தினர், பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனினும், பயங்கரவாதிகளின் தாக்குதலில் 5 ராணுவத்தினர் உள்பட 6 பேர் உயிரிழந்துவிட்டனர். பெண்கள், குழந்தைகள் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
இதனிடையே, அந்த ராணுவ முகாமில் ஞாயிற்றுக்கிழமை மாலை வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. ஆனால், சீரமைப்புப் பணி காரணமாக அந்த சத்தங்கள் எழுந்ததாகவும், புதிதாக துப்பாக்கிச் சண்டை எதுவும் நிகழவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், வேறு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா? என்பதைக் கண்டறிவதற்காக முகாமில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜம்மு அருகேயுள்ள வேறொரு ராணுவ முகாமில் கடந்த 2016-ஆம் ஆண்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில், 2 ராணுவ அதிகாரிகளும் 5 வீரர்களும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
சட்டப் பேரவையில் மௌன அஞ்சலி: சஞ்சுவான் ராணுவ முகாமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் பலியான ராணுவத்தினருக்கு, ஜம்மு - காஷ்மீர் சட்டப் பேரவையில் திங்கள்கிழமை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தேசிய மாநாட்டுக் கட்சி எம்எல்ஏ தேவேந்தர் சிங் விடுத்த கோரிக்கையை ஏற்று, 2 நிமிடத்துக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், தாக்குதல் சம்பவம் தொடர்பாக மாநில அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேவேந்தர் சிங் வலியுறுத்தினார். அப்போது, சஞ்சுவான் முகாமில் ராணுவத்தினரின் நடவடிக்கை இறுதிக்கட்டத்தில் இருப்பதாக பேரவை விவகாரங்கள் துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.