இந்தியத் தூதருக்கு 4-ஆவது முறையாக பாகிஸ்தான் சம்மன்
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்திய ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டி அந்நாட்டு தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள இந்திய துணைத் தூதர் ஜே.பி.சிங்கை
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்திய ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டி அந்நாட்டு தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள இந்திய துணைத் தூதர் ஜே.பி.சிங்கை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் 4-ஆவது முறையாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தெற்காசிய மற்றும் சார்க் அமைப்புக்கான பாகிஸ்தான் அரசின் பொது இயக்குநர் முகமது ஃபைசல், ஜே.பி.சிங்கை நேரில் அழைத்து ராவல்கோட்/சத்வால் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதற்காக வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கு இடையே கடந்த 2003-ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீற வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் அறிவுறுத்தினாலும் இந்திய ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
அண்மையில் அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரு தொழிலாளர் உயிரிழந்தார் என்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்துவது சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு எதிரானதாகும் என சிங்கிடம் ஃபைசல் தெரிவித்தார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய துணைத் தூதர் ஜே.பி.சிங்குக்கு கடந்த 5, 15, 20 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியது. கடந்த மாதம் 5 முறை சம்மன் அனுப்பப்பட்டது.