தற்போது சமூக வலைதளங்களில் பல்வேறு வகையிலான அரசியல் விமரிசனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், அவை யாவும் அரசியல் பால பாடம் கூட அறியாதவர்கள்தான் செய்கின்றனர் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து நிதீஷ் குமார் கூறியதாவது:
தற்போதைய காலகட்டத்தில் அரசியல் தொடர்பான பொதுவான விமரிசனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அவை யாவும் அரசியல் பால பாடம் கூட அறியாதவர்களால் செய்யப்படுகிறது.
சமூக வலைதளங்களில் வெளியாகும் கருத்துக்களில் பெரும்பாலானவை சமூக சிந்தனையற்றதாகவே உள்ளது. லாலு பிரசாத் யாதவுக்கு வழங்கியுள்ள தண்டனை குறித்து நாங்கள் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. ஏனெனில் அது நீதிமன்றத் தீர்ப்பாகும்.
அதுபோல நீதியிலும், வளர்ச்சியிலும் எங்கள் கருத்து என்றும் மாறாது. இதில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம், எந்த சமரசமும் செய்ய விரும்பவில்லை என்றார்.
முன்னதாக, கால்நடைத் தீவன ஊழல் 3-ஆவது வழக்கிலும் பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.