ஆமதாபாத்-தில்லி விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் இருந்து தில்லி நோக்கி புறப்பட இருந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலியான தொலைபேசி மிரட்டல் வந்ததை அடுத்து அந்த விமானம் 4 மணி
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் இருந்து தில்லி நோக்கி புறப்பட இருந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலியான தொலைபேசி மிரட்டல் வந்ததை அடுத்து அந்த விமானம் 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
இதுகுறித்து ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தின் இயக்குநர் மனோஜ் கங்கல் கூறியதாவது:
விஸ்தாரா விமான நிறுவனத்தின் குர்கான் அழைப்பு மையத்துக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திங்கள்கிழமை காலை தொடர்புகொண்டு, ஆமதாபாதில் இருந்து தில்லி செல்லும் விமானத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பான தகவல் உடனடியாக ஆமதாபாதில் பெறப்பட்டு வெடிகுண்டு அச்சுறுத்தல் மதிப்பீட்டு குழுவினர் அந்த அழைப்பை சோதனை செய்தனர்.
பின்னர் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில், ஒத்திகை நடவடிக்கை என்ற பெயரில் சம்பந்தப்பட்ட விமானத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது அந்த விமானத்தில் வெடிப் பொருள்கள் ஏதும் இல்லை என அறியப்பட்டது.
இதையடுத்து அந்த விமானத்தின் பயணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு 4 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது என்று மனோஜ் கங்கல் கூறினார்.