முகப்பு
இந்தியா

உடல் ஆரோக்கியத்துக்காக பிரத்யேக தொலைக்காட்சி சேனல் - மத்திய அரசு முடிவு

உடல் ஆரோக்கியத்துக்காக பிரத்யேக தொலைக்காட்சி சேனலை விரைவில் நிறுவ நிதி ஆயோக் முடிவு செய்துள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:18 PM
பகிர்:

உடல் ஆரோக்கியத்துக்காக பிரத்யேக தொலைக்காட்சி சேனலை விரைவில் நிறுவ நிதி ஆயோக் முடிவு செய்துள்ளது.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு டிடி கிசான் என்று மத்திய அரசால் ஒரு புதிய சேனல் தொடங்கப்பட்டது. இதில், பிரத்யேகமாக வேளாண் மற்றும் விவசாயிகளின் பிரச்னைகள் குறித்தான நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பப்படும். இதே போன்று தற்போது உடல் ஆரோக்கியத்துக்காக பிரத்யேக சேனலை விரைவில் தொடங்குவதற்கு நிதி ஆயோக் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து நிதி ஆயோக்கின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,

"டிடி கிசான் போன்று உடல் ஆரோக்கியத்துக்காக ஒரு பிரத்யேக தொலைக்காட்சி சேனலை தொடங்க மத்திய அரசு காத்திருக்கிறது. ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவச் செலவை ஏற்கும் காப்பீட்டு திட்டத்தில் 10 கோடி மக்களை இணைக்கும் முனைப்பில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதனால்,  இந்த முக்கியமான திட்டத்தை குறைந்த காலத்தில் வெற்றியடையச் செய்ய தகவல்களை கொண்டு சேர்ப்பதற்கு ஒரு வலுவான தளம் நிச்சயம் அவசியம்.

இந்த புதிய சேனலை நிறுவுவதற்கு தூர்தர்ஷனிடன் போதுமான திறன் உள்ளது. அதனை குறுகிய காலகட்டத்திலேயே நிறுவும் அளவுக்கு தூர்தர்ஷனிடம் போதிய உள்கட்டமைப்பு வசதியும் உள்ளது.

உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் தூர்தர்ஷனும் நாட்டின் அனைத்து தரப்பிலும் இருந்தும் கவனத்தை ஈர்க்கும்.     "

பாஜக அரசின் முக்கிய திட்டங்களான ஸ்வச் பாரத், மிஷன் இந்திரதனுஷ் உள்ளிட்ட பெரும்பாலான திட்டங்கள் உடல் ஆரோக்கியத்துடன் இணைந்ததாகவே உள்ளது. அதனால், இந்த அரசு உடல் ஆரோக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

இந்தியாவில் உள்ள மருத்துவ நிலையங்களின் ஆலோசனைகள் மற்றும் அவர்களது கருத்துகளாக இல்லாமல் சொந்த கருத்துக்களுடனும், நிகழ்ச்சிகளுடனுமே இந்த சேனல் நடத்தப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல இடம் பிடிக்கும்" என்றார்.

இந்த சேனலை தொடங்கி ஒளிபரப்புவதற்கான செயல்திட்டங்களை வகுக்க வல்லுநர்க் குழு ஆராய்ச்சிகளையும், ஆலோசனைகளையும் நடத்தி வருகின்றன.

டிடி கிசான் சேனல் தொடங்கப்பட்ட காலத்தில் பெரிதளவு நிகழ்ச்சிகள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டது. அதன்பிறகு, தனக்கான மக்களை அந்த சேனல் கவர்ந்துவிட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது புதிய சேனலை தொடங்குவதற்கு மத்திய அரசு திட்டம் தீட்டியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.