புதுதில்லி: என்.ஆர்.ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணங்களை 48 மணி நேரத்தில் பதிவு செய்யாவிட்டால், அவர்களது பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
என்.ஆர்.ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களால் திருமணம் செய்து கொள்ளப்படும் இந்தியப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு,ம் பாதிக்கப்படும் பெண்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும், கடந்த, 1969-ம் ஆண்டு வெளிநாட்டு திருமணச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்தச் சட்டம் குறித்து பெரும்பாலானோருக்கு பெரிய விழிப்புணர்வு இல்லை.
இந்நிலையில் என்.ஆர்.ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணங்களை 48 மணி நேரத்தில் பதிவு செய்யாவிட்டால், அவர்களது பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தில்லியில் வியாழன் அன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியதாவது:
வெளிநாட்டில் பணிபுரியும் என்.ஆர்.ஐ கணவர்களால் இந்திய பெண்கள் கைவிடப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் உள்நாட்டில் திருமணம் செய்து கொள்ளும் என்.ஆர்.ஐக்கள் (வெளிநாடு வாழ் இந்தியர்கள்), திருமணம் நடந்து முடிந்த 48 மணி நேரத்தில் அவர்களது திருமணத்தை அரசிடம் முறைப்படி பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாவிட்டால் அவர்களது பாஸ்போர்ட்டுகள் முடக்கப்படும். அத்துடன் அவர்களுக்கு விசா வழங்கப்பட மாட்டாது
அவ்வாறு அவர்கள் செய்ய தவறினால், அவர்கள் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் 'லுக்-அவுட்' எனப்படும் கண்காணிப்பு நோட்டீசும் அனுப்பப்படும். இது குறித்து அனைத்து பதிவாளர்களுக்கும் முறைப்படி அரசுத் தரப்பிலிருந்து அறிவுறுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.