கருத்து வேறுபாடு இருந்தது உண்மைதான். ஆனால் காங்கிரஸ்-மஜத கூட்டணி பலமாக உள்ளது என கர்நாடக அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத இடையிலான கூட்டணி ஆட்சி ஏற்படுத்தப்பட்டு மஜத தலைவர் குமாரசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அமைச்சரவைப் பட்டியலும் வெளியிடப்பட்டது. இருப்பினும் இலாகா எதுவும் ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில், அமைச்சரவையின் ஒதுக்கீட்டில் சில உறுப்பினர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது வெளிச்சமானது. இரு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களும் இதில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனால் காங்கிரஸ், மஜத கூட்டணியில் இழுபறி சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும் இந்த கூட்டணியில் சில எம்எல்ஏ-க்களுக்கு விருப்பமில்லை எனவும், அவர்கள் பாஜக-வில் இணையவிருப்பதாகவும் பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக அமைச்சருமான டி.கே.சிவகுமார் கூறியதாவது:
கர்நாடக தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை எடியூரப்பா உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்து எம்எல்ஏ-க்களுக்கும் அவர்களின் நிலை தெரியும். எனவே தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை எடியூரப்பா நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும் எதிர்கட்சித் தலைவராக அவர் தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
காங்கிரஸ், மஜத கூட்டணியில் துவக்கத்தில் சிலருக்கு விருப்பமில்லை. இருப்பினும் தற்போது பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அனைத்து கருத்து வேறுபாடுகளும் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், மஜத கூட்டணி பலமாக உள்ளது. எனவே இந்த அரசு எந்த பிரச்னையும் இன்றி நடைபெறும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.