தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சிபிஐ விசாரணை வேண்டி திருமாவளவன் பொதுநல வழக்கு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் 100-ஆவது நாளில் வன்முறையுடன் முடிவடைந்தது. இதில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்தான விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் விசாரணை நடத்தும் பெரும்பாலான போலீஸார் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்களே என்பதால் நியாயம் கிடைக்குமா என்பதில் சந்தேகம் இருப்பதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் அவர் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்தான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் வழக்கின் மீதான விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.