கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் கோயிலகுண்ட்லா பகுதியைச் சேர்ந்த குடிமகன் ஒருவர் தனது ஒட்டுமொத்தக் குடும்பத்தை ரூ.6.5 லட்சத்துக்கு விற்பனை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
குடிமகனின் மனைவி வெங்கடம்மா ஐசிடிஎஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது தொடர்பாக புகார் அளித்ததைத் தொடர்ந்த இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதாவது, பசுபுலேதி மட்டிலேட்டி, தனது மனைவி மற்றும் 5 பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு குடிப்பழக்கம் ஏற்பட்ட பிறகு, அவர்களது குடும்பமே நாசமானது.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான மட்டிலேட்டி, தனது 10 வயது மகளை உறவினருக்கு ரூ.1.5 லட்சத்துக்கு விற்றுள்ளார். அதாவது தனது மகள் பெரியவளானதும், உறவினருக்கே திருமணம் செய்து வைப்பதாகக் கூறி பணத்தைப் பெற்றுள்ளார். இது பற்றி குடும்பத்தாருக்கு எதுவும் தெரியாது.
இந்த நிலையில், கடந்த மாதம் தனது சகோதரனுக்கு, மனைவி மற்றும் 4 பிள்ளைகளை ரூ.5 லட்சத்துக்கு விற்றுள்ளார். இந்த நிலையில், மட்டிலேட்டியின் சகோதரன் குடும்பத்தாரை தனக்கு விற்பனை செய்தது குறித்து முறைப்படி கையெழுத்திட்டு தருமாறு கூறிய போதுதான் தாங்கள் விற்கப்பட்ட விஷயமே வெங்கடம்மாவுக்கு தெரிய வந்தது.
கணவரின் கொடுமை தாங்க முடியாத வெங்கடம்மா தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கிருந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஐசிடிஎஸ் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக வெங்கடம்மாவின் மகள்கள் மீட்கப்பட்டு அரசு இல்லத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.