முகப்பு
இந்தியா

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி: மெஹுல் சோக்ஸிக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் மெஹுல் சோக்ஸிக்கு எதிராக அமலாக்கத்துறை இன்று (வியாழக்கிழமை) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:04 PM
கோப்புப்படம்
பகிர்:

பஞ்சாப் நேஷனல் வங்கியில், சில வங்கி ஊழியர்களின் உதவியுடன் வைரவியாபாரி நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி 11,400 கோடி ரூபாய் பணமோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த மோசடி 2011-இல் தொடங்கிய நிலையில் கடந்த ஜனவரி மாதம் 3-ஆவது வாரத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பஞ்சாப் நேஷனல் வங்கி சிபிஐ-யிடம் புகார் அளித்தது. 

அதன்படி, சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி சிபிஐ, பிணையில் வெளிவராதபடி நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி மீது வாரண்ட் உத்தரவை பிறப்பித்தது. மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இதற்கான அனுமதியை வழங்கியது. 

இதற்கிடையில், சிபிஐ வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் பிப்ரவரி மாதம் சோக்ஸிக்கு எதிரான பணமோசடி வழக்கை தொடர்ந்தனர். சோக்ஸி உள்ளிட்ட 9 பேர் மற்றும் 5 நிறுவனங்களுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டம் 2002 பிரிவு 4-இன் படி பணமோசடி செய்த குற்றத்துக்காக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.  

இதையடுத்து, கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன உரிமையாளர் மெஹுல் சோக்ஸி ஜூன் 27-ஆம் தேதி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். அதில், "உடல்நலம் கருதியும், எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதையும் கருத்தில் கொண்டு பிணையில் வெளிவராத வகையில் பிறப்பித்துள்ள வாரண்ட் உத்தரவை ரத்து செய்யவேண்டும். உடல்நலம் சரியில்லாததால் என்னால் பயணம் மேற்கொண்டு நீதிமன்றத்தை அணுக முடியாது. இந்தியாவில் எனக்கு பாதுகாப்பு இல்லை, அதனால் தற்போதைய சூழலில் நீதிமன்றத்துக்கு கூட நான் இருக்கும் இடத்தை வெளியிட முடியாது" என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், மும்பை பணமோசடி தடுப்புச் சட்டம் சிறப்பு நீதிமன்றத்தில் மெஹுல் சோக்ஸிக்கு எதிராக அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.