பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளும் திட்டத்துக்கு பச்சைக் கொடி காட்டிய தேவெ கௌடா தற்போது ஒரு சின்ன யு டர்ன் போட்டுள்ளார்.
அதாவது, பாஜகவை வீழ்த்தி கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து ஆட்சி அமைத்திருக்கும் மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவெ கௌட, காங்கிரசுடன் கைகோர்த்ததால், 2019ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரசுடன் மஜத போட்டியிடும் என்று அர்த்தமில்லை என்று கூறியிருப்பது எதிரணியினருக்கு சற்று என்று கூற முடியாது, சற்று அதிகமாகவே வியர்த்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த மாதம் குமாரசாமி முதல்வராக பதவியேற்கும் விழா நடைபெற்றது. அதில், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தெலுங்கு தேசம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு எதிரணியினரின் பலத்தை நாட்டுக்கு அல்ல பாஜகவுக்கு உணர்த்தினர்.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியாக திரண்டு போட்டியிடும் என்று காங்கிரஸ் தரப்பிலும் கூறப்பட்டு வந்தது.
ஆனால், இதற்கு நேர் மாறாக தேவெ கௌட நேற்று செய்தியாளர்களிடம் தனது குரலை உயர்த்தியுள்ளார்.
அதாவது அனைத்து மாநிலங்களிலும் காங்கிரசுடன் இணைந்து போட்டியிட வேண்டியது அவசியம் இல்லை என்றும், கர்நாடகாவில் மஜத கட்சியை காங்கிரஸ் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டிருப்பது இதுவரை இலைமறைக் காயாக இருந்த நிலையில், தேவெ கௌடவின் இந்த பேச்சு, பட்டவர்த்தனமாக்கியுள்ளது.
ஓராண்டுக்கு மட்டுமே இந்த கூட்டணி நீடிக்கும் என்று சித்தராமையா கூறியது குறித்து தேவெகௌடவிடம் கேட்டதற்கு, அது அவரது நினைப்பு என்று பதிலளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.