ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனுக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதேபோல், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை சட்டவிரோத பணப்பரிவர்த்தனைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்தநிலையில், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன், தனக்கு இந்த வழக்கில் ஜாமீன்கோரி தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு, தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுனில் ராணா முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ரூ.2 லட்சம் மதிப்பிலான பிரமாண உறுதிப்பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில், பாஸ்கரராமனுக்கு ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். அதேபோல், வழக்கு விசாரணையில் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு பாஸ்கரராமன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.
முன்னதாக, இதே வழக்கில் சிபிஐ கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முன்ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் பாஸ்கரராமன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீது தில்லி சிறப்பு நீதிமன்றம் வரும் 19ஆம் தேதி உத்தரவை பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.